Thursday, July 24, 2014

Fwd: Amritha Vahini - knowledge


---------- Forwarded message ----------
From: Srini Vas <getwellanjaneyar@gmail.com>





ஞானம் 

உபநிஷத் என்பது   வேதாந்த  சாரம்.  கடலின்  சுருங்கிய  வடிவம். பொருளின்  கரு.   நம்மை பொருத்தவரையில்  பொதுவாக  உபநிஷத்  என்றால்   ஏதோ நமக்கு  புரியாத  ஒன்று.  கொஞ்சம்  தூரமாகவே  நின்று  கைகட்டி  பார்த்துவிட்டு திரும்ப   மறந்து  போக வேண்டிய  விஷயம்  என்பது தானே.   அப்படி இல்லவே இல்லை.  கொஞ்சம்  யோசித்து  ஆர்வமுடன்  பார்த்தால்  அடடா  இத்தனைநாள்  இதை  கவனிக்காமல் போனோமே என்று  தோன்றும். எல்லாம் நமது மனசே  காரணம். 


பல  உபநிஷதங்கள் உள்ளன.  இஷோ பநிஷத்  என்று  ஒன்று.  அதில்  ஒரு  விள்ளல்.



மொத்தம்   4  வேதம்.  (சாம , யஜுர்,  ரிக்,  அதர்வ)   


ரிக்                        =    தெய்வம்,  தேவதைகள்  சம்பந்தப்பட்டது.

யஜுர்                  =    நாம்  செய்ய  வேண்டிய கர்மா, பற்றியெல்லாம்  சொல்வது 

சாம                     =    கடவுளோடு  சம்பந்தபடுத்துவது,   உபாசனை,

அதர்வ              =      உலக  சம்பந்தப்பட்ட விஷயங்கள் ,  வாழ்க்கை, குடும்பம்  போன்றதில்  ஈடுபட. 


இஷோபநிஷத்  என்ன சொல்கிறது;


முழு உலகுமே பகவானின் ஸ்ருஷ்டி .  அவன்  எங்குமிருப்பவன்  சர்வ வியாபி. 

பிரபஞ்சமே ஏதோ ஒரு வேகத்தில்  நகர்ந்து கொண்டிருக்கிறது. 

ஒருநாள் எல்லாவற்றையும்  நாம்  உதறிவிட்டு  உலகில்  அனுபவித்தது  போதும்  என்று  கிளம்ப போகிறோம்.  எதுவும்  நம்   சொந்தம் அல்ல. 

இந்த  பகவான்  என்பவர்   அணுவிலும் அணுவானவர்,   குட்டியிலும்  குட்டியாக  இந்த  பிரபஞ்சத்தில் எதிலும்  இருப்பவர். 

நாம் எதை  நினைத்தாலும்,  செய்தாலும்  அதெல்லாமும்  அவருக்கு  தெரிகிறது. பார்த்துக்கொண்டே தான்  கேட்டுக்கொண்டே  தான் இருக்கிறார். (ஜாக்ரதை!!) 

எதற்காக  நம்மை  உருவாக்கியிருக்கிறார் ? 

உலகில் சொந்த பந்தம்,  வாழ்வு  சாவு, எல்லாம்  புரிந்துகொள். கொஞ்சம் கொஞ்சமாக  இதிலிருந்து மீண்டு, விடுபட்டு ஆனந்தமாக  இரு.  எல்லாம்  நம்மை  விட்டு  போனால்  தான் ஆனந்தம்.  சுற்றிலும்  சூழ்ந்து கொண்டு  இருக்கும்போது  அல்ல.


(திருமந்திரத்தில்  ஒரு  அருமையான  பாடல்  ;  


ஆசை  அறுமின்கள்  ஆசை  அறுமின்கள்,  

ஈசனோடு  ஆயினும்  ஆசை  அறுமின்கள்,  

ஆசை படப்பட  ஆய்  வரும்  துன்பம்,  

ஆசை விட விட   ஆனந்தம் ஆமே . 


 இந்த நிலைக்கு  தான்  மோக்ஷம், முக்தி  என்றெல்லாம்  பேர்  வைத்திருக்கிறார்கள். 


வீட்டில்  இருப்பதே  ஏதோ  ரயில்வே  ஸ்டேஷனில்  அடுத்த  ட்ரெய்னுக்கு   காத்திருப்பது  போல்  நினைப்பு  வரவேண்டும். (பட்னத்தார்  சொன்னது  ஞாபகத்துக்கு  வரட்டும்.  காது  அறுந்துபோன  ஊசி  கூட  நம்மோடு கடைசியில்  வரப்போவதில்லை)  


இப்படி  ஒரு  எண்ணம்  வந்தால்  என்ன ஆகும்?


1.    உலக  இன்ப விஷயங்களில்  கொஞ்சம்  ஈடுபாடு  குறையும்.


2      எது பார்த்தாலும் வேணும்  என்பது  குறைஞ்சு,  எது  ரொம்ப  ரொம்ப  அத்யவசியமோ  அது  மட்டும்  போதுமே   என்று  தோண  வைக்கும். 


3.   எது  நடந்தாலும்,  ''அதக்கென்ன  பண்றது  ஏதோ  நடந்துட்டுது  என்ன  பண்ண முடியும்.   எல்லாம்  அது  அது  எப்படி  நடக்க ணுமோ  அப்படி தானே  நடக்கும்  '' என்கிற  எண்ணம்  அடிக்கடி  வரும்.   வரணும். 


4.   மரணத்தை  பயம்  இல்லாமல்  எதிர்கொள்ள வைக்கும். 


5.     வாழும்போது,  நீர், காற்று, வீடு, வெளிச்சம், சக்தி, உடை, எல்லாம் தேவை தான்.  ஆனால்  இதிலேயே  உழலாமல்  இன்னும்  கொஞ்சமும்  பார்க்கணும்.  நமக்கு  உள்ளேயும்  கொஞ்சம்  நுழையணும். சின்ன  குழந்தையாக இருக்கும்போது,  மேச்பாக்ஸ் மேலே  உள்ள  லேபல்  சேர்த்தேன்,  இதாலே  நிறையப்பேர்  பின்னாலே  ஒடி  எக்ஸ்சேன்ஜ்  பண்ணேன். பலப்பம் சேர்த்தேன். ஸ்டாம்ப் எல்லாம் சேர்த்தேன்.  சினிமாக்காரர்கள் படங்களை  ஒட்டி வைச்சேன்.  அவர்கள்  கை எழுத்துக்கு  வேட்டை ஆடினேன்.  

(கோடம்பாக்கம்  பிரிட்ஜ் அப்போ  கிடையாது.  ரெயில்வே கேட்  ரொம்ப  நேரம்  சாத்தி  ரெண்டு பக்கமும்  நிறைய  வண்டிகள்  நிற்கும்.  அதில்  எல்லாம்  படப்பிடிப்புக்கு  போகிற  நடிகர் நடிகையர்கள் ,  இரவெல்லாம்  ஷூட்டிங்  முடிந்து  வீடு  திரும்புபவர்கள்  கேட் திறக்க  காத்திருக்கும்போது  கூட்ட மாக  ஒடி  நடிகர்கள் கிட்டே  கைஎழுத்து  வாங்கினது  ஞாபகம்  இருக்கிறது.  ஒரு  நடிகர்  எனது   நோட்  புஸ்தகத்தையே  கோபமாக  கிழித்து கூட போட்டார்.  மீதிபேர்  கையெழுத்து  ஆசையாக  வாங்கியது எல்லாமும் போச்சு) 


பொம்மைகள்  எல்லாம் நிறைய  இருந்தது.  யார்  கிட்டயும்  குடுக்க மாட்டேன்.  தொடவே  விடமாட்டேன்.  இதெல்லாம்  எங்கே  இப்போ?  அதுமாதிரி  நாம்  வயதாக  வயதாக  கொஞ்சம் கொஞ்சமாக   ஈடுபாடுகளை  குறைத்து   உள்  நோக்கி  பிரயாணம் செய்யவேண்டும் . 


பொதுவாக   அதிக  பட்ச  வயசு  100 என்றிருந்தாலும்  மரணத்தை பற்றிய  எண்ணம்  சிறிதும்  இல்லையென்றால்,  300-400  வயசு  கூட   இருக்கலாம் என்கிறது  உபநிஷத்.  இருக்கிறதைக்கூட   குறைச்சுக்கவும்  முடியுமாம்.  இயற்கையோட  ஒட்டி  வாழனும் அது  தான் முக்கியம்.  


உடம்பு  எடுத்ததே  நமது  கர்மங்களை  சரியாக  செய்வதற்கு  தான். செய்யவேண்டியதை தள்ளி போடுவதோ, செய்யாமல் விடுவதோ  கூடாது. 


ஒரு  பெண்  ஒருவனிடம்  துன்புறுகிறாள் என்று  வைத்துகொள்வோம்.   நாம்  அப்போது என்ன  செய்யலாம்  என்பதற்கு 3  ஆப்ஷன் இருக்கு. 


1. ''அவளுக்கு நன்றாக  வேணும்  அவன்  தவில்  தொடர்ந்து  வாசிக்கட்டும்''  என்று  அடிப்பவனை ஆதரிப்பது. 

2. குறுக்கே  பாய்ந்து  அவனை  விலக்கி சமாதானப்படுத்தி   அவளை துன்புறுத்துபவனிடமிருந்து  அவளை  காப்பது.

3. எது எங்கே  எப்படி  நடந்தா  நமக்கென்ன.  நம் வழி நாம் செல்வோம்  என்று   ஏதோ  சினிமா  போஸ்டரை   பார்ப்பதுபோல்  பார்த்துக்கொண்டு  நடப்பது . 


மேலே சொன்ன  மூணுமே  நமது  செயலுக்கு  உட்பட்டது.   இது  எல்லாமே  கர்மா.  நினைப்பது  சொல்வது  செய்வது.   3வது  ஆப்ஷன்  சொன்னேனே    அதாவது அது  ஒண்ணுமே  கண்டுக்காம  போவது.    அதுவும்  கர்மாவில்  சேர்க்கை.    செய்வது செய்யாதது  ரெண்டுமே கூட  கர்மா  தான் . 


நம் மனசு  நிறைவேற்றும்  திட்டம்  தான் நமது  கர்மா. புரிகிறதா?  அப்புறம்   அப்படி  சம்பாதித்த  கர்மாவின்  சம்பளம்  தான் கர்ம பலன். அது  இன்பத்தையோ  துன்பத்தையோ நமக்கு தரும்.  நம்மை  பொறுத்தவரை  எது  இன்பம்  தரும் என்று   நினைக்கிறோமே அதைத்தான்  செய்கிறோம்.  துன்பத்தை யாராவது  தேடிப்போவார்களா?   இப்படி கர்மா  செய்கிறோமே அதை எப்படி  செய்யவேண்டும்.  ''இன்பம்,சுகம் ''  கிடைப்பதற்காகவா?  இல்லை.  ஒரு  பலனும்  எதிர்பார்க்காமல் அதில் ச்ரத்தையுடன் ஈடுபட வேண்டும்.   என்ன கிடைக்கும் என்று  கணக்கு  போட்டு  செய்யக்கூடாது. 


இதற்கு  ரெண்டு  காரணம்:


1.  என்ன  கிடைக்கும்  என்பது  எதிர்பார்ப்புக்கு  அப்பாற்பட்டது. எப்போ  என்றும் தெரியாது. அதால்  ஏமாற்றம்  வரலாமே. 


2.  கர்மா செய்கிறபோது  செய்யவேண்டியது  என்பதற்காக மனம்  ஈடுபட்டு  பலன் நோக்காமல் செய்யவேண்டும். 


குழந்தைகளை  மார்க்  வாங்குவதற்காக  படிக்க வைக்கிறோம். அவர்கள்   படிப்பினால்  வாங்கிய  மார்க்குக்கு  ஏதோ  ஒரு  வேலை.   அதற்கும் அவர்கள்  படித்த   படிப்புக்கும்  சம்பந்தமில்லை.   உத்தியோகத்துக்கும்  படிப்புக்கும்  உள்ள ஒரே  சம்பந்தம்  படிப்பை  காட்டி  கிடைத்த  ஏதோ  ஒரு  உத்தியோகத்தால்  கிடைக்கும்  காசு.  


பெற்றோர்களும்  மற்றோர்களும்   குழந்தைகளின்   படிப்பு  அவர்களை  வாழ்வில்  சீர் படுத்தவேண்டும்  என்று  காசை  கொட்டுவதிலையே.  கை நிறைய காசு  எப்படி  கிடைக்கும்  என்பதற்காக்  படிக்கும்  படிப்பு. 


எங்கள்  காலத்தில்     SSLC   படிக்கும்போது  கூட  படி  என்றோ என்ன  படித்தாய், என்ன மார்க்  என்றோ  எங்கள் பெற்றோர்  கேட்டது  கிடையாது.    


பெற்றோர் தன் மகனோ, மகளோ விஷய ஞானம்  பெற வேண்டும்  என்று  படிப்பில் ஆர்வம்  வர செய்தால்  ஒவ்வொரு  வீட்டிலும்  விவேகானந்தனை  பார்க்கலாம்.


அவன்  சர்வ வியாபி   என்றும்  அவனன்றி  ஓர்  அணுவும்  அசையாது என்றும்  எப்போதும்  நினைவில்  இருந்தாலே  போதும். பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற  குணங்கள் அறவே  ஒதுங்கும்.  அன்பு எல்லோரிடமும்  மெதுவாக  தலை தூக்கும்..பலன்  நோக்காமல்  செய்வதையே  நிஷ்காம கர்மம்  என்று குண்டு  குண்டு  புத்தகங்கள்  கூறுகிறது.  மன சாட்சி என்று  உள்ளே ஒன்று தப்பு  செய்கிறோம்  என்று உணரும்போது உறுத்துவதையும்,  சரியான வழி காட்டுவதையும்  உள்ளே ஒரு  சின்ன  மெல்லிய குரல் என்று  காந்தியடிகள்  கூறுவார்.    அது தான்  என்னை வழி நடத்துகிறது என்பாரே.  


இருட்டில் வாழவே அநேகர் விரும்புகிறார்கள். அதாவது  அறியாமையில்.  தான்  தனது, என்று  சுய லாப  வாழ்க்கையில்  ஈடுபடுவர்களுக்கு  இந்த பிறவியில் மட்டுமல்ல  இனி வரும் பிறவியிலும்  இருள்  தான்.  கிடைக்கும்  பலன்  துன்பம் துயரம்  வலி.  


மனசாட்சி என்ற  மென்மையான  குரல்  ஒன்று எல்லோர்  உள்ளத்திலும் உற்று  கவனித்தால் கேட்கும்.  அது  தான்  இதை  செய்யாதே ,  அதை உடனே  செய்  என்று   நம்மை  அறிவுறுத்துகிறது.  மகாத்மா  காந்தி அடிக்கடி  என்னுடைய  அந்தராத்மாவின்  குரல் என்னை  ஊக்குவித்ததால் நான்  செயல்  புரிய முடிந்தது  என்பார்.  நாமோ  அதையே  கொன்றுவிடுகிறோம். நாம் எல்லாம்  ஆத்ம ஹனா (ஆத்மாவை கொல்வோர்).    காந்தி  போன்று  அதை மதித்து  பின்பற்றுவோர்  ஆத்ம ஜனா (ஆத்மாவின் பிள்ளைகள்)  


யாவிலும்  உட்பொருளான  பரமன் நம்  ஆத்மாவில்  குடிகொண்டுள்ளான்.  நம்  மனதில்  மாறி  மாறி  தோன்றும்  எண்ணங்கள் அனைத்தும்   அவன் அறிவான்.   நமது  சுதந்திரத்தை  தவறாக  பயன் படுத்தி தவறான  வழியில்  செல்ல முயற்சிக்கும்போது உடனே  தடுக்கிறான்.  தப்பு  கர்மா  பண்ண  யத்தனிக்கும்போது  நம்மை எச்சரிக்கிறான்.  இது  மனச்சாட்சியின்  உறுத்தல்.  உள்ளிருக்கும்  சிறிய  ஆத்மா எனும் அணு,   இந்த    பிரபஞ்சம் பூரா பரவி நிற்கும்   பரமன்  எனும்  பிரம்மாண்டமே தான்.   வேறில்லை.  அவன் கட்டளையை  தான்  மனச்சாட்சி  பிரதிபலிக்கிறது.   வேண்டுமென்றே அதை  புறக்கணித்தபோது  நாம் 

அ--சுரனாகிறோம்.  (சுரனாக  இன்றி, அதாவது  கடவுளின் அறிவுரையை எதிர்த்து)  எனவே தான்  தப்பான கர்மா கைமேல் பலனாக இந்த ஜன்மத்திலும்  வட்டி சேர்த்த முதலாக  அடுத்த   பிறவிகளிலும் வாட்டுகிறது. 


கடவுள் நிலைத்து  ஒரே இடத்தில் இருப்பவர்.  எப்படி?.  அவர் எங்கும்  போகவேண்டியதில்லையே. அனைத்திலும்  நிறைந்தவர் எங்கு  எதற்கு  அசைய  வேண்டும்?  எனவே  எண்ணம்  ஒன்றின்  மேல்  செல்லும்  வேகத்தைவிட  கடவுள்  அங்கே  சென்று விடுகிறார்  என்று  சொல்கிறவர்கள். இன்னும்  சரியாக  யோசிக்க வேண்டும்.    எதற்கு  செல்லவேண்டும்.  எங்கு எண்ணம் செல்கிறதோ  அங்கும்  கடவுள்   ஏற்கனவே இருக்கிறாரே. இது தெரியாதவன்  தான்  கடவுள்  வேகமாக அங்கு செல்கிறார்  என்பான்.  குழந்தைகள்  ட்ரெய்னில்  செல்லும்போது  எதிரே  தந்திக்கம்பங்கள்  வீடுகள்  மரங்கள்  ஓடுகிறது  என்று சொல்வது  போல.    ரிஷிகள்  ஒரு இடத்தில்  இருந்து கொண்டே  எங்கோ  நடக்கும்  விஷயத்தை  சொல்லமுடிந்தது  ஏன்  என்றால்  அதை  மனத்திலேயே  பார்க்க முடிந்தது.  இது தான்  அது.   


கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்  என்பது  தெரிந்தவன்  நல்ல  கர்மாவையே  செய்வான்..அவனைத்தேடி  எங்கும் செல்ல வேண்டாம்.   அசையாமல்  பேசாமல் 
அவன்  மேல்  பரிபூர்ண  பக்தியுடன்  அன்புடன்  இரு.    சகலமும்  எப்படி நடக்கவேண்டுமோ  அப்படியே  நடக்கும்.  ரிஷி  பதஞ்சலி  இதை   ஈஸ்வர ப்ரணி தன  என்கிறார்  பதஞ்சலி யோகத்தில்.  


இப்போது  புரிகிறதா  கடவுள்  தூணிலும் இருப்பார்  துரும்பிலும்  இருப்பார்  என்பதன் அர்த்தம்.  அவர்  அசையும்  அசையா ஜீவன் எதிலும்  உள்ளார்,  அண்டத்திலும்  பிண்டத்திலும் உள்ளார்,   உள்ளும்     வெளியும் இருப்பவர் என்பது 


நம்பாதவர்க்கு,  புரியாதவர்க்கு  அவர்  எங்கோ இருக்கிறார்.  அல்லது  இல்லை.  அறிந்து கொள்வது  தான்  ஞானம்.   பரமனையே  எல்லாமாகவும்  எல்லாவற்றையுமே   பரமனாகவும் பார்ப்பதை  தான்  அழகாக  திருமூலர்  சொல்லியிருக்கிறார்.


மரத்தை  மறைத்தது மாமத  யானை,  

மரத்தில்  மறைந்தது  மாமத யானை,  

பரத்தை மறைத்தது  பார்முதல்  பூதம்,  

பரத்தில்  மறைந்தது  பார் முதல்  பூதம். 


அழகான  தேக்கு  மரத்தில்  யானை  செய்யப்பட்டிருக்கிறது .  மரத்தின்  அழகை  ரசித்தவன் கண்ணில்  அதில் செய்யப்பட்டிருந்த  யானை  தெரியவில்லை.   யானையின்  கம்பீரம், அசல் உணர்ச்சி ததும்பும் உருவத்தை வியந்தவனுக்கு  அருமையான  தேக்கு  மரம் அது  என்று  மனம் சொல்லவில்லை.   அதுபோலவே  பரமனை சகல  தாவர  ஜங்கமத்திலும் அசையும் அசையா  பொருள்களில் பார்ப்பவனுக்கு  அவை  தெரியவில்லை.   வெறுமே  தாவர  ஜங்கம  வஸ்துக்களில் மனம் செலுத்துபவனுக்கு  அதன்  உள்  நின்று ஒளிரும் பரமன் தெரியான். 


எனவே  தான்  பரமனை  உருவகப்படுத்தி  இது  தான்  அவன்  என்று  சொல்ல முடியாது.   எந்த  உருவத்தையும்  படைத்து  இது தான்  அவன்  என்றாலும்  மனமுவந்து  அதாக  அவனை    வணங்குவதும் சரியே.  ஏனெனில்  அதிலும்  அவன்  உள்ளான்.


அவனுக்கும்  நமக்கும் என்ன வேறுபாடு.

அவன்  எங்கும் எதிலும்.  பிரபஞ்சமே  அவன்,  அவனிலேயே  இந்த  பிரபஞ்சம்.  நாம்  எங்கு  எப்படி இருக்கிறோமோ அப்படியே. 

தோன்றி மறையும்   அனைத்தும் அவனே. 

அவன்  தேகமற்ற்வன், எனவே  நம்மில்  அவன் வேறுபட்டவன்.  காயமோ, நரம்போ, சதையோ, வலியோ பசியோ, தாகமோ ,  எதுவுமில்லை அவனுக்கு. . 

அசுத்தமற்றவன்.  

தீயவை  தீய சக்தி நெருங்காதவ்ன். 

அவன் நமக்கு  கொடுத்த முதல்  புத்தகம்  வேதம்.  நாம்  எதெதையோ  புத்தகமாக  எழுதுகிறோம். 

அவன் நமது மனதை  முழுதும்  அறிந்தவன்.   நாமோ  சிறிது கூட  மனதை   மதியாதவர்கள்   .

அவன்   அனந்த கோடி  வஸ்துக்களை வைத்து  இந்த  பிரபஞ்சத்தையே  படைத்தவன்.   நாமோ கொஞ்சூண்டு  அவனைக்காபி பண்ணி ஏனோ தானோ என்று  எதையோ   தப்பும் தவறுமாக பண்ணிவிட்டு  மார்  தட்டுகிறோம்.  


பிறவி எடுத்ததே பிறர்க்குழைக்கத்தான்.     சுய  தேவைகளுக்காகவே வாழ்பவன்  அதமன். மிருகம்.


வித்யா என்பது  ஞானம், என்றும்   ஸாஸ்வதமானதை  அறியும்,  ஆராயும் ஞானம்.    ஆத்மா  பற்றிய சிந்தனை.  

அ -வித்யா  உலக வாழ்வு சம்பந்தப்பட்ட   விஞ்ஞானம்.   ஜடப்பொருள்  பற்றியது.     இத்தகைய விஞ்ஞான அறிவு இருட்டிலிருந்து  வெளிக்கொணராது.   ஞானம்    விஞ்ஞானம்   ரெண்டுமே அறிந்தவன்  தான் முழுமையான  ஞானவான்.  


விஞ்ஞானம்   உலகில் வாழ தேவைகளை  பூர்த்தி செய்ய உதவுகிறது.  மெய்ஞானம்  உள்ளே   பரிசுத்தத்தை அளிக்கிறது.  100  என்ன பண்டைய  காலத்தில்  வாழ்ந்தது போல்  200 வருஷங்கள்  கூட  மனிதன்  வாழ  விஞ்ஞான அறிவு  போதாது. மனித  வாழ்கையை   செம்மையாக்க பர ஞானம் தேவை.  இதற்கு  புத்தகங்கள்,  பிரசங்கங்கள்,  டிவி லெக்சர், மட்டும்  போதாது.  தனிமையில்  ஆத்மா பற்றி  சிந்திக்க வேண்டும்.  யோகா  உதவும்.   சரியான  குரு  கை கொடுப்பார்.  படிப்படியாக  முன்னேறலாம். நல்ல   கர்மாக்கள் தீய  கர்மாக்களை கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்கும்.  

-- getwell

No comments: